×

95 டிஎம்சி நிலுவை நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்: காவிரி ஒழுங்காற்று குழுவில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி: காவிரி நீர் முறைப்படுத்தும் ஒழுங்காற்று குழுவின் 95வது கூட்டம் நேற்று அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு அரசின் உறுப்பினர் எம்.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் கூறுகையில்,“ 2023 ஜூன் 1, முதல் ஏப்ரல் 28 வரை பில்லிகுண்டுலுவில், உச்சநீதிமன்ற ஆணையின்படி கர்நாடகா தரவேண்டிய 174.49 டி.எம்.சி.அடி நீருக்கு பதிலாக 78.72 டி.எம்.சி. மட்டுமே காவிரியில் பெறப்பட்டுள்ளது. இதில் மீதமுள்ள 95.77 டி.எம்.சி நீர் நிலுவையில் உள்ளது. தற்போது மேட்டூர் அணையில் நீர் இருப்பு 20:182 டி.எம்.சி மட்டுமே உள்ளதால், மேட்டூர் அணையிலிருந்து 1200 கன அடி நீரை, குடிநீர் தேவைக்காகவும் மற்றும் சுற்றுச்சூழல் தேவைக்காவும் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதில் கர்நாடகாவின் நான்கு முக்கிய அணைகளில் உள்ள நீர் இருப்பை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு தரப்படவேண்டிய சுற்றுச்சூழல் நிலுவை நீரினை உடனடியாக கர்நாடகா அரசு பில்லிகுண்டுலுவில் உறுதிபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து கர்நாடகா அரசு தரப்பில் ஆஜரான உறுப்பினர்,”தற்போது கர்நாடக அணைகளின் நீர் இருப்பு கர்நாடகத்தின் குடிநீர் தேவைக்கு மட்டுமே போதுமானதாக இருப்பதானால் தமிழ்நாட்டிற்கு மேலும் நீர் அளிக்க முடியாது என தெரிவித்தார். இதையடுத்து அனைத்து தரப்பு கோரிக்கைகளையும் கேட்ட ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினீத் குப்தா, மே மாதத்திற்கான 2.5 டி.எம்.சி நீரினை தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post 95 டிஎம்சி நிலுவை நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்: காவிரி ஒழுங்காற்று குழுவில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Tamil Nadu govt ,Cauvery ,New Delhi ,meeting ,Cauvery Water Management Regulatory Committee ,Vineet Gupta ,Tamil Nadu ,Kerala ,Puduvai ,Tamil Nadu government ,Cauvery regulation committee ,Dinakaran ,
× RELATED காவிரியில் 2.5 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு பரிந்துரை